சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மதுபோதைக்கு அடிமையான சரண்ராஜ், தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று இரவும் வழக்கம்போல் குடிபோதையில் வீடு திரும்பிய சரண்ராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சரண்ராஜ், காய்கறி வெட்டும் கத்தியால் முத்துமாரியம்மாளை வலது மார்பில் சரமாரியாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
மனைவி கீழே விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடிய சரண்ராஜ், 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ஏமாற்ற முயன்றார். செவிலியர்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த கொளத்தூர் போலீசார், உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளி சரண்ராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
