உலகளவில் பெரும்பாலான மக்களிடம் காணப்படும் பொதுவான பழக்கங்களில் ஒன்று லாட்டரி சீட்டு வாங்குவது. “என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் கதவைத் தட்டாதா, ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிவிடமாட்டோமா?” என்ற எதிர்பார்ப்பும் ஆசையுமே இதற்குக் காரணம். பல ஆண்டுகளாக லட்சக்கணக்கில் பணம் செலவழித்தும் ஒருமுறை கூடப் பரிசு பெறாதவர்கள் ஒருபுறம் இருக்க, முதன்முறையாக வாங்கிய ஒரே ஒரு டிக்கெட்டிலேயே கோடீஸ்வரரான அதிர்ஷ்டசாலிகளும் உண்டு. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தெற்கு இத்தாலியில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அங்குள்ள ஒரு பெண் சமீபத்தில் வாங்கிய லாட்டரி சீட்டை, கவனக்குறைவாகக் குப்பையில் தூக்கி எறிந்துவிட, வழக்கம் போலத் தூய்மைப் பணியாளர்களும் அதை எடுத்துச் சென்றுவிட்டனர். ஆனால், அவர் குப்பையில் போட்ட அந்த டிக்கெட்டிற்குத்தான் சுமார் ₹11 கோடி ரூபாய் மெகா பரிசு விழுந்திருந்தது. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகக் குப்பை மேலாண்மை நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, தொடர்ந்து இரண்டு நாட்கள் தீவிரமாகத் தேடி ஒருவழியாக அந்த லாட்டரி சீட்டைக் கண்டுபிடித்துள்ளார். மேலும், அந்தத் தேடுதல் வேட்டைக்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்து, தொலைந்த தன் அதிர்ஷ்டத்தைக் கையில் பிடித்துள்ளார்.
