அசாம் மாநிலத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைலாகண்டி மாவட்டத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நேரத்தில் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவரது காதலன், தனது நண்பர்களுடன் வீட்டிற்குச் சென்றுள்ளான். அதேநேரத்தில், அந்தச் சிறுமி மற்றொரு இளைஞருடனும் தொடர்பில் இருந்ததை அறிந்த அந்த இரண்டு தரப்பும் இணைந்து பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூர குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. மின்சார ஆட்டோ மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்களாகப் பணிபுரியும் ஐந்து நபர்களும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
வன் கொடுமைக்கு பின், தாக்குதல்தாரிகள் சிறுமியின் தலையில் செங்கலால் அடித்துக் கொன்றதுடன், அவரது அந்தரங்க உறுப்பில் மர மத்தை சொருகி அசாத்திய சித்திரவதையும் செய்துள்ளனர். பாட்டியின் இறுதிச்சடங்கு முடிந்து தாயாரும் சகோதரரும் வீடு திரும்பியபோது, சிறுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறை, 16 வயது சிறுவன் உட்பட குற்றத்தில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த கொடூர சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனத்தையும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளனர்.
