கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியில் உள்ள ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில், பிராந்திய போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக, அதிக பாரம் ஏற்றி வந்த டம்பர் லாரி ஓட்டுநர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாரிகள் தங்களைப் பிடித்து அபராதம் விதித்துவிடுவார்கள் என்ற பயத்தில், அந்த லாரியின் ஓட்டுநர் நெடுஞ்சாலையிலேயே லாரியின் பின்புற ஹைட்ராலிக் அமைப்பை உயர்த்தி, தான் ஏற்றி வந்த சிவப்பு கற்கள் மற்றும் ஜல்லிகளை சாலையில் கொட்டியபடி அதிவேகமாக, தவறான திசையில் வண்டியை ஓட்டி தப்பியோடியுள்ளார்.
இந்தச் செயலால் அந்த அதிவேக நெடுஞ்சாலை முழுவதும் கற்கள் சிதறி விழுந்து, அந்த வழியே பயணித்த பல வாகனங்களின் டயர்கள் வெடித்தன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பெரும் விபத்து ஏற்படும் அபாயகரமான சூழலும் உருவானது. லாரியில் இருந்து கற்கள் சாலையில் கொட்டும் இந்த ஒட்டுமொத்த காட்சியையும் அந்த வழியே சென்ற மற்றொரு வாகன ஓட்டி தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது இணையத்தில் வேகமாகப் பரவியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாத்ரி காவல் துறையினர் மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், போலீசார் உடனடியாக மண்வெட்டிகளை கைகளில் எடுத்து, ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் சாலையில் சிதறி கிடந்த கற்களை அகற்றி போக்குவரத்தைச் சீரமைத்தனர். இந்த இக்கட்டான சூழலில் விரைந்து செயல்பட்ட உத்தரப் பிரதேச போலீசாரின் செயலுக்கு இணையவாசிகள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தலைமறைவான லாரி ஓட்டுநரை அடையாளம் காண போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
