கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது கிருஷ்ணதாஸ், லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி 33 வயது பவித்ரா. இந்தத் தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், பவித்ராவுக்கும் திருவிடைக்கோடு வாசி, கிருஷ்ணதாஸின் நண்பர் ரமேஷுக்கு இடையே நெருக்கமான பழக்கம் உருவானது. இது படிப்படியாக திருமண வரம்பை மீறிய கள்ளக்காதலாக மாறியது.
கடந்த 30-ஆம் தேதி இரவு, கிருஷ்ணதாஸ், ரமேஷ், அவரது நண்பர் விமல் ஆகியோர் வில்லுக்குறிய அருகிலுள்ள கொற்றிப்பாறைவிளையில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் உட்கார்ந்து மது அருந்தினர். ஆனால், அடுத்த நாள் காலை அந்தக் கட்டிடத்தில் கிருஷ்ணதாஸ் ரத்தத்தில் வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணைத் தொடங்கினர்.
இதற்கிடையில், கிருஷ்ணதாஸின் தாய் கிருஷ்ணகுமாரி(61), இரணியல் போலீஸில் புகார் அளித்தார். அதில், “மகன் மனைவி பவித்ராவுக்கும் ரமேஷுக்கு இடையே கள்ள உறவு இருந்தது. இதை அறிந்த கிருஷ்ணதாஸ் தனது மனைவியைத் திட்டியதால் ஆத்திரத்தில் பவித்ரா, தன் காதலன் ரமேஷை ஏவி இந்தக் கொலையைச் செய்துவிட்டாள்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கொலையில் பவித்ராவின் தாய் முத்துலட்சுமிக்கும்(57) தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து, பவித்ராவையும் அவரது அம்மா முத்துலட்சுமியையும் போலீசார் அழைத்து கடுமையான விசாரணை நடத்தினர். அப்போது முத்துலட்சுமி கூறியதாவது, “எனது வீடு மற்றும் கிருஷ்ணதாஸ் வீடு பக்கத்து பக்கத்திலேயே உள்ளன. இதனால் கிருஷ்ணதாஸ் என் மகளை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.
சில நாட்களுக்கு முன் போதையில் என் வீட்டுக்கு வந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். இதை அறிந்து மனமுடைந்த நான், பவித்ராவிடம் சொன்னேன். அதிர்ச்சியடைந்த பவித்ரா இதை ரமேஷிடம் தெரிவித்தார். அதன் பிறகு ரமேஷ், தன் நண்பர் விமலுடன் சேர்ந்து கிருஷ்ணதாஸை பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி கொன்றார் என கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பவித்ராவையும் முத்துலட்சுமியையும் போலீசார் கைது செய்து தக்கல் சிறைக்கு அனுப்பினர். ரமேஷ் விமல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
