தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வாக்குறுதியில், தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மகளிர் குழுக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, சுய உதவிக் குழுக்களில் இருந்து சிறு மற்றும் குறு தொழில் முனைவோராக மாற விரும்பும் பெண்களுக்கு, அவர்கள் வாங்கும் ரூ. 5 லட்சம் முதலீட்டுத் தொகை முழுமையாக மானியமாக மாற்றப்படும். இந்தத் தொகையை அவர்கள் அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் தொழில்முயற்சிகளை ஊக்குவித்து, அவர்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்
மேலும், தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சிறப்பாகவும் நன்முறையிலும் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படும் என்றும் தவெக-வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மகளிர் அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் இந்தத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த விரிவான அறிவிப்புகள், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய பட்ஜெட்டில் வெளியாகும் எனப் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
