வாழ்க்கை இயந்திரத்தனமாகிப்போன இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தத்தாலும் தனிமையாலும் வாடும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்த மும்பையைச் சேர்ந்த அர்ஜுன் தேஷ்பாண்டே என்பவர், மிகவும் வித்தியாசமான ஒரு சேவையைத் தொடங்கியுள்ளார். கடற்கரைக்கு வரும் நபர்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்பதையே அவர் ஒரு தொழிலாகச் செய்து வருகிறார். மற்றவர்கள் தங்கள் மனக்குமுறல்களைக் கொட்ட ஒரு வடிகாலாக இருக்கும் இந்தச் சேவைக்கு அவர் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலிக்கிறார்.
இந்த விசித்திரமான சேவையைப் பெற விரும்புபவர்களிடம், அவர்கள் பேசுவதைக் கேட்பதற்காக மட்டும் 250 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சோகத்தில் இருப்பவர்கள் அழுதால், அவர்களுடன் சேர்ந்து இவரும் அழுவார் (Cry together service). தங்களைப் புரிந்து கொண்டு, தங்களோடு சேர்ந்து வருத்தப்படும் ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உணர்வு, மன உளைச்சலில் இருப்பவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருப்பதாக அர்ஜுன் தெரிவிக்கிறார்.
“நவீன உலகில் பலருக்கும் தங்கள் மனக்குறைகளைச் சொல்ல ஆள் இல்லை. நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ சொல்லத் தயங்கும் விஷயங்களை, முகம் தெரியாத ஒருவரிடம் கொட்டித் தீர்க்க மக்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் அர்ஜுன். இவர் வெறும் கேட்பாளராக மட்டுமின்றி, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் ஒரு நபராகவும் இருப்பதால், மும்பை கடற்கரைக்கு வரும் பல இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இவரது சேவையை நாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இந்தப் புதிய தொழில் குறித்த செய்தி வெளியானதும், பலரும் வியப்புடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “கேட்பதற்கே வேடிக்கையாக இருந்தாலும், இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை” என்று ஒரு தரப்பினரும், “மனித உணர்வுகளுக்கும் விலை பேசும் நிலை வந்துவிட்டதே” என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். எது எப்படியோ, தனிமையில் வாடும் பலருக்கு அர்ஜுனின் இந்த ‘அழுகை சேவை’ ஒரு மருந்தாகவே பார்க்கப்படுகிறது.
Man charges people to listen to problems. Ye hum free mein karte hai 😂 pic.twitter.com/X0plpZSWFG
— प्रेsident (@Desi_urbann) March 20, 2026
