கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பையா”. இத்திரைப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்து வேற லெவலில் ஹிட் அடித்தன. மேலும் இத்திரைப்படமும் மாபெரும் வெற்றிபெற்றது. இத்திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு ரிரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் லிங்குசாமி, “பையா” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது முதலில் லிங்குசாமி, கார்த்தியிடம் “பருத்திவீரன்” பாணியிலான ஒரு கதையைதான் கூறினாராம்.
ஆனால் கார்த்தியோ, “சார் உங்க கிட்ட ஒரு ஸ்டைலான கதை எதிர்பார்த்தேன். ரன் படம் மாதிரி” என்று மிகவும் ஓபனாக பேசினாராம். அதற்கு பிறகுதான் லிங்குசாமி கதையை மாற்றினாராம்.
இது குறித்து லிங்குசாமி பேசியபோது, “பையா திரைப்படம் நான் தயாரித்த முதல் திரைப்படம். கார்த்தி அப்போது பருத்திவீரன் படத்தில் நடித்து முடித்திருந்தார். நான் அவரிடம் ஒரு கதை கூறினேன். அதற்கு அவர் ரொம்பவும் ஸ்மார்டாக, ‘சார் உங்க கிட்ட நான் ஸ்டைலான ஒரு கதையை எதிர்பார்த்தேன், ரன் படம் மாதிரி’ என்று கூறினார். அதன் பின் அவருக்காகவே நான் அந்த கதையை மாற்றினேன். அவர் அப்படி சொன்னது அவருடைய பார்வையில் அது சரி.
நான் முதலில் சொன்ன கதையும் பருத்திவீரன் மாதிரியான கதைதான். ஒரு வேளை கார்த்தி அப்படி கேட்காமல் இருந்திருந்தால் பையா என்ற படமே உருவாகி இருக்காது” என்று கூறியுள்ளார்.