இந்து மத வழிபாட்டில் விளக்கு ஏற்றுவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு வீட்டிலும் தினமும் விளக்கு எரிய வேண்டும். அப்பொழுதுதான் வீட்டில் இருக்கும் இருள் கெட்ட சக்திகள் வெளியேறி தெய்வம் நம் வீட்டிற்கு குடியேறும் என்பார்கள். எந்த ஒரு வழிபாட்டை தொடங்குவதானாலும் சரி யாகம் ஹோமம் வளர்ப்பதாக இருந்தாலும் சரி முதலாவதாக விளக்கு தான் ஏற்றுவார்கள். அப்படி நம் வீட்டில் பூஜை செய்யும் போது விளக்கு ஏற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன எத்தனை விளக்கு வீட்டில் ஏற்றினால் நல்லது என்பதை பற்றி இனி காண்போம்.

நம் முன்னோர் காலத்தில் வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் ஒரு விளக்கு நிலை வாசலில் இரண்டு விளக்கு வெளியில் மாடம் வைத்து மாட விளக்கு என்று இத்தனை விளக்குகள் ஏற்றினார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் அவ்வளவு விளக்குகள் ஏற்றுவது சற்று சிரமமான காரியம் தான். அதனால் நீங்கள் வீட்டில் பூஜை அறையில் ஒன்று அல்லது இரண்டு தீபங்களை தினமும் ஏற்ற வேண்டும். செவ்வாய் வெள்ளி போன்ற தினங்களில் ஐந்து விளக்குகள் அல்லது ஐந்து முகமாக ஏற்றது மிகுந்த பலன்களை நமக்குத் தரும்.
வீட்டு பூஜை அறையில் 5 விளக்குகளை 5 சுடர் எரியவிட்ட பிறகு வீட்டு வெளியே நிலை வாசலில் இரண்டு விளக்குகள் வைத்தால் அது லட்சுமியை நம் வீட்டிற்குள் கொண்டு வரும். இல்லையேல் வீட்டு பூஜை அறையில் மூன்று விளக்கு ஏற்றி வைத்து இரண்டு விளக்கு வெளியே நிலைவாசலிலும் வைக்கலாம் அது வீட்டிற்கு ஒளியை தந்து செல்வம் கொழிக்கும்.
நாம் விளக்கு ஏற்றும் போது கிழக்கு முகமாக பார்த்து தான் தீபம் ஏற்ற வேண்டும். தெற்கு திசையை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் விளக்கு ஏற்றுவதற்கான உகந்த நேரம் அதிகாலை 3 மணி முதல் 6:00 மணிக்குள்ளாகவும் அதே போல் மாலை நேரத்தில் ஐந்து முதல் ஆறு மணிக்கு உள்ளாகவே விளக்கு ஏற்றி விடுங்கள். அதேபோல் விளக்கில் நல்லெண்ணெய் நெய் ஆகியவற்றை சேர்த்து ஏற்றும்போது நல்ல பலன்களைத் தரும். இல்லையென்றால் பஞ்ச கூட்டு எண்ணெய் என்று கிடைக்கும் அதை வாங்கி விளக்கு ஏற்றினாலும் நல்ல பலன்களை தரும்.

விளக்கேற்றும் போது செய்யக்கூடாதவை என்று பார்க்கப் போனால் ஒரு விளக்கிற்கு பயன்படுத்தியா எண்ணையை மற்றொரு விளக்குக்கு ஊத்தக்கூடாது. விளக்கை சுத்தம் செய்த பிறகு புதிதாக எண்ணெய் திரி போட்டு தான் பயன்படுத்த வேண்டும். வெள்ளி செவ்வாய் தவிர மற்ற நாட்களில் தான் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் விளக்கு ஏற்றிவிட்டு குளிர வைக்கும் போது வாயால் ஊதியோ கையை வைத்தோ அணைக்க கூடாது. பூவையோ அல்லது ஒரு ரூபாய் நாணயத்தையோ வைத்து விளக்கை மெதுவாக மலையேற்றலாம்.
