அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. திருப்பதி பாதையில் சிறுத்தையோடு நேருக்கு நேர் மோதிய பக்தர்கள்…. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ….!

By SATHISH R on ஆடி 11, 2026

Spread the love

திருமலை அலிபிரி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாகப் பக்தர்கள் அலறியடித்து ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் முக்கியப் பாதையான அலிபிரி பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே இந்தச் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. இதைக் கண்ட பக்தர்கள் அச்சத்தில் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையில், அங்கிருந்தவர்கள் சிலர் இச்சம்பவத்தைக் காட்சியாகப் பதிவு செய்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பலத்த சத்தங்களை எழுப்பியும், கூச்சலிட்டும் சிறுத்தையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பக்தர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், எக்காரணத்தைக் கொண்டும் தனியாகப் பயணிக்காமல் குழுக்களாக மட்டுமே செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நடைபாதையில் ஏதேனும் வனவிலங்குகளைக் கண்டால், அவற்றைத் துரத்தவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்காமல் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

   

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அலிபிரி நடைபாதை முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கக் கூடுதல் கண்காணிப்புக் கேமராக்களும், பாதுகாப்புப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடர்ந்த சேஷாச்சலம் வனப்பகுதி வழியாகச் செல்லும் இந்த நடைபாதையில் அடிக்கடி வனவிலங்குகள் புகுவது பக்தர்களிடையே தொடர் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

   

திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் பாரம்பரியமிக்க இந்த அலிபிரி நடைபாதை சுமார் 11 கிலோமீட்டர் நீளமும், 3,550 படிகளையும் கொண்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் (TTD) பராமரிக்கப்படும் இப்பாதையைப் பயன்படுத்தி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே மலைக்குச் செல்கின்றனர். இந்த நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பக்தர்களுக்குத் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகளும், இலவசத் தரிசன அனுமதியும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.