தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளின் மர்ம மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போதைய தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாகர்கோவில் மற்றும் சென்னை புழல் சிறைகளில் நிகழ்ந்துள்ள கைதிகளின் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முந்தைய திமுக ஆட்சியைப் போலவே தற்போதைய தவெக அரசும் விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு விலை பேசும் ஒரு ‘துஷ்ட சக்தியாக’ மாறி செயல்பட்டு வருகிறது என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்குவதை விடுத்து, அமைச்சர்களை அனுப்பி நிவாரண நிதி என்ற பெயரில் பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க இந்த அரசு முயல்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்கள், தற்போது ‘யானையின் பிடியிலிருந்து தப்பி முதலையின் வாய்க்குள் விழுந்தது போல’ பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே முதலமைச்சருக்கு இத்தகைய மமதை எண்ணம் வந்திருப்பது வேதனைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திரையுலகில் கோடி கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நடிப்பதைக் போல ஆட்சி சக்கரத்தை நடத்த முடியாது என்பதை தவெக முதலமைச்சர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுத்ததுடன் தங்களின் கடமை முடிந்துவிட்டது என ஆட்சியாளர்கள் மிதப்பில் இருக்கக் கூடாது என்றும், இனிமேலாவது ஏமாற்றத்தைத் தராத வகையில் நேர்மையான முறையில் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையின் வாயிலாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
