“1000 கோடி சொத்து… அதிமுகவின் ரகசிய ஆயுதம்”… அடிச்சு தூக்கும் லீமா ரோஸ்?… பரபரக்கும் சர்வே ரிப்போர்ட்…!

By Nanthini on வைகாசி 1, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதன் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் பார்வையும் திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதியின் பக்கம் திரும்பியுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், பிரபல ஊடகமான ‘மின்னம்பலம்’ நடத்திய கள ஆய்வில், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் வெற்றிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் தமிழகத்தின் பெரும் கோடீஸ்வர வேட்பாளராகக் களம் கண்டுள்ள லீமா ரோஸின் வருகை, இந்தத் தொகுதியை நட்சத்திரத் அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளது.

இந்தத் தேர்தலில் லால்குடியில் நிலவும் போட்டி மிகக் கடுமையானதாக, ஒரு “நூலிழைப் போராட்டமாக” உருவெடுத்துள்ளது. மின்னம்பலத்தின் எக்ஸிட் போல் முடிவுகளின்படி, அதிமுகவின் லீமா ரோஸ் மார்ட்டின் 35 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை மிக நெருக்கமாகப் பின்தொடரும் திமுக வேட்பாளர் டி. பாரிவள்ளல் 34 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசம் என்பது இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் கடும் போட்டியை உணர்த்துகிறது. அதேவேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கு.ப. கிருஷ்ணன் 21 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் மதன் 9 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் எனத் தெரிகிறது.

   

தொடக்கத்தில் பாஜகவில் இருந்த லீமா ரோஸ் மார்ட்டின், தேர்தல் அரசியலில் தடம் பதிக்கும் நோக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தது ஒரு முக்கிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகிறது. வேட்புமனுத் தாக்கலின் போது அவர் தாக்கல் செய்த ரூ.139.62 கோடி அசையும் சொத்துகள் மற்றும் ரூ.909.94 கோடி அசையா சொத்துகள் உள்ளிட்ட விவரங்கள், அவரைத் தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே அதிக சொத்து கொண்ட வேட்பாளராக அடையாளப்படுத்தியது. நிதி பலத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் காட்டிய தீவிரம் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை வலுப்படுத்தியுள்ளதாகக் கள ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

   

லால்குடி தொகுதி பாரம்பரியமாகப் பலம் வாய்ந்த கோட்டையாகக் கருதப்படும் சூழலில், தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் பிரிக்கும் வாக்குகள் யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மின்னம்பலத்தின் கணிப்புப்படி, வாக்குகள் பிரிவது திமுகவை விட அதிமுகவிற்கே சாதகமாக முடிந்துள்ளதைக் காட்டுகிறது. சாண்டியாகோ மார்ட்டின் மீதான விமர்சனங்கள் மற்றும் கட்சி மாறிய விவகாரங்களைத் தாண்டி, அதிமுகவின் வாக்குறுதிகளும் லீமா ரோஸின் வேகமான முன்னெடுப்புகளும் அவருக்கு வெற்றியைத் தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ‘நூலிழை’ கணிப்பு மே 4 அன்று நிஜமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.