பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் ‘லக்பதி திதி யோஜனா’ என்ற சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் (SHG) உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டு மாற்றப்படுகிறார்கள். பெண்களை வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்காமல், அவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு புதிய தொழில் தொடங்க அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. கடனுக்கான வட்டிச் சுமையை அரசே ஏற்றுக் கொள்வதால், பெண்கள் கடன் சுமையின்றி தொழிலில் கவனம் செலுத்த முடிகிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் சிறு வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் கால்பதிக்க இக்கடன் பெரும் உதவியாக இருக்கும்.
இத்திட்டத்தின் பயனைப் பெற, விண்ணப்பதாரர் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவராக இருப்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருப்பதும் அவசியம். விண்ணப்பிக்கும் பெண்கள் தங்களின் தொழில் யோசனையை ஒரு தெளிவான வணிகத் திட்டமாக (Business Plan) சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டம் துறை ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், கடன் தொகை நேரடியாக அவர்களின் வங்கித் கணக்கில் செலுத்தப்படும்.
இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ அல்லது அருகிலுள்ள மகளிர் சுய உதவிக் குழு அலுவலகம் மற்றும் அரசு வங்கிகள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, வங்கி விவரங்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். முறையான வழிகாட்டுதல்களுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து அவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
