உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் வேத் பிரகாஷ் சிங் என்பவரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலத்த காயமடைந்தார். முதுகுத்தண்டில் குண்டு பாய்ந்ததால் அவர் எழுந்து உட்காரவோ அல்லது மருத்துவம் பார்த்து வருமானம் ஈட்டவோ முடியாத மாற்றுத்திறனாளி நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்தச் சூழலில், கணவரின் வாழ்வாதாரத்தை அழித்த அதே மனைவி வினீதா, அவரிடமிருந்து மாதந்தோறும் பராமரிப்புத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இக்கோரிக்கையை ஏற்கனவே குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்த நிலையில், வினீதா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவரின் வருமானம் ஈட்டும் திறனை மனைவியின் குடும்பத்தினரே திட்டமிட்டுச் சிதைத்துவிட்டு, இப்போது அவரிடமே பணம் கேட்பது அநீதியானது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
கணவர் தனது மனைவியைப் பராமரிக்க வேண்டியது கடமை என்றாலும், அது அவரது உடல் நலம் மற்றும் வருமானத்தைப் பொறுத்தது என்று நீதிபதி தெளிவுபடுத்தினார். ஒருவரது தவறான செயலால் உருவான பாதிப்பைப் பயன்படுத்தி, சட்டத்தின் மூலம் ஆதாயம் அடைய முடியாது என்ற இந்த அதிரடித் தீர்ப்பு, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
