நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 266 அப்ரெண்டீஸ் (பயிற்சி) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பிளான்ட் ஆபரேட்டர் (136), எலக்ட்ரீஷியன் (47), ஃபிட்டர் (30) உட்பட பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிகளுக்கு 12-ஆம் வகுப்பு (அறிவியல் பிரிவில் 50% மதிப்பெண்) அல்லது ஐ.டி.ஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்திருப்பது கட்டாயமாகும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 2026 ஜூன் 29 அன்றைய நிலவரப்படி 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இப் பயிற்சி காலத்தில் முதல் ஆண்டு ரூ.20,000-மும், இரண்டாம் ஆண்டு ரூ.22,000-மும் மாதச் சம்பளமாக வழங்கப்படும். பயிற்சி வெற்றிகரமாக முடிந்த பிறகு, நிரந்தர அரசுப் பணியாக நிலை-3 இன் கீழ் மாதம் ரூ.34,720 சம்பளம் வழங்கப்படும்.
இப்பணிகளுக்குப் பூர்வாங்க கணினிவழித் தேர்வு (Preliminary Test), மேம்பட்ட கணினிவழித் தேர்வு (Advanced Test) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய மூன்று கட்ட தேர்வு முறை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை; மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். தகுதியுள்ள நபர்கள் 2026 ஜூன் 8 முதல் ஜூன் 29 வரை https://www.npcilcareers.co.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
