விஜய் கொடுத்த வாய்ப்பு…! பெண் என்பதால் வீட்டிலேயே எதிர்ப்பு.. விமர்சனங்களை உடைத்து எம்.எல்.ஏ-வாக மாறிய கீர்த்தனாவின் வெற்றிக் கதை…!

By Swetha on வைகாசி 8, 2026

Spread the love

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். 29 வயதான அவர், 68,709 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். சாதாரணப் பின்னணியில் இருந்து வந்த தனக்கு, அரசியல் களத்தில் வாய்ப்பளித்த விஜய் அண்ணாவிற்குத் தனது நன்றியை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆலோசகராக ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் இருந்தாலும், பெண் என்பதால் அரசியலுக்குச் செல்வதில் தனது வீட்டிலேயே கட்டுப்பாடுகள் இருந்ததாகக் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார். தவெக வேட்பாளராக நின்றபோது பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்ததாகவும், “அனில்” போன்ற பெயர்களால் கிண்டல் செய்ததாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால், எதற்கும் பதில் சொல்லாமல் மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததே தனது வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறினார்.

   

பிரச்சாரத்தின்போது தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்துப் பேசிய அவர், சாட்சியாபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது அதிமுக மற்றும் பாஜகவினர் தங்களை விரட்டியதாகவும், வாக்களிக்கச் சென்றவர்களின் கைகளைப் பிடித்து இழுத்ததாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சிவகாசியில் உள்ள பெரும் முதலாளிகளிடம் மட்டும் வாக்கு கேட்காமல், அடித்தட்டு மக்களின் குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து செயல்பட்டதால் மக்கள் தனக்கு ஆதரவு அளித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.