நடிகர் சூர்யா நடித்த படம் ரெட்ரோ கடந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. அதன்பிறகு 9 மாதங்கள் கடந்தும் இன்னும் சூர்யாவின் அடுத்த படம் திரைக்கு வரவில்லை. ரெட்ரோ படத்துக்கு பிறகு நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த 45வது படம் கருப்பு. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
கருப்பு படம் கடந்தாண்டு தீபாவளிக்கே ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் விற்பனை ஆகாததால் இந்த படம் திரைக்கு வராமல் தள்ளிப் போனது. ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு பிறகு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது.கடைசியாக பிப்ரவரி 19ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் இப்போது ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 10ம் தேதியும் இந்த படம் திரைக்கு வருமா என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவர் ஏப்ரல் முதல் வாரத்தில் அதாவது ஏப்ரல் 10 தேதி வாக்கில் தேர்தல் வரப்போகிறது என்று சூசகமாக கூறியிருக்கிறார். அப்படி சட்டசபை தேர்தல் வரும் பட்சத்தில் ஏப்ரல் 10ம் தேதியும் கருப்பு படம் ரிலீஸ் ஆகவில்லை என்றே தகவல் வெளியாகி உள்ளது.
