தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார்.
இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இடையில் அவர் அரசியல் கட்சி தொடங்கி அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அதன் பின்னர் தற்போது மீண்டும் நடிகராக தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
அவர் சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இந்த காலத்தில் அவர் 160 படங்கள்தான் நடித்துள்ளார். இந்நிலையில் தான் ஏன் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பது குறித்து கருணாஸ் பதிலளித்துள்ளார்.
அதில் “என்னையும் விளம்பரங்களில் நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால் நான் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் பயன்படுத்தாத ஒரு பொருளை ஒரு வருடமாக பயன்படுத்தியதாக பொய் சொல்லி அப்பாவி மக்கள ஏமாத்த விரும்பல. விஷத்த விளம்பரம் செய்தா வாங்கி சாப்பிடும் நிலை இப்போ வந்துடுச்சு” எனக் கூறியுள்ளார்.