ஸ்டாலின், உதயநிதிக்கு அடுத்து இவரா?…. தேசிய அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் கனிமொழி?… தமிழக அரசியலில் அடுத்த ‘பவர்ஃபுல்’ என்ட்ரி….!

By Nanthini on பங்குனி 11, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அவர் திருச்செந்தூர் தொகுதியில் களமிறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்துள்ளது. இதற்காக அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, திமுகவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அடுத்தபடியாக, கனிமொழியின் பெயரிலேயே அதிகப்படியான விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு அவர் மாற வேண்டும் என்பது தொண்டர்களின் நீண்ட நாள் விருப்பமாக இருந்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

   

கனிமொழி தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடர்ந்து வருகிறார். இன்னும் மூன்று ஆண்டுகள் எம்பி பதவி எஞ்சியுள்ள நிலையில், அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவை கட்சித் தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் முக்கியப் பங்கு வகிப்பது மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான சுமூக உறவைப் பேணுவது என மாநில அரசியலில் அவர் காட்டி வரும் தீவிரம், அவர் சட்டசபைக்குள் நுழைவதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

   

திருச்செந்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்படுவதால், அங்கு கனிமொழி போட்டியிடுவது அவருக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தரும் என உடன்பிறப்புகள் கருதுகின்றனர். சாதி மற்றும் மதவாத சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்படும் ஒரு தலைவர் என்ற நற்பெயரும் அவருக்குக் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ள நிலையில், கனிமொழி திருச்செந்தூர் தொகுதியில் களம் காண்பாரா என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரியவரும்.