ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பவானி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய கனிமொழி எம்.பி., அதிமுக – பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடினார். தமிழகத்திற்குத் துரோகம் இழைக்கவே இந்தத் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் கூட்டணியின் உண்மையான தலைவர் பாஜகதான் என்றும், அமித்ஷா சொல்வதைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி கைகட்டி நிற்பதாகவும் விமர்சித்தார். மேலும், ஒன்றிய பட்ஜெட்டில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே புறக்கணிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கும் கூட்டணியாக இது இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு, சி.ஏ.ஏ ஆதரவு மற்றும் ஜெயலலிதாவால் மறுக்கப்பட்ட ‘உதய்’ மின் திட்டம் போன்றவற்றைக் கனிமொழி நினைவு கூர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று நாடகமாடிய பழனிசாமி, தற்போது மீண்டும் அவர்களுடன் இணைந்திருப்பதை விமர்சித்த அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்த மாநிலத் தலைவர்களின் கதி என்ன ஆனது என்பதைப் பார்க்க வேண்டும் என்றார். குறிப்பாகப் பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் நிலையை உதாரணமாகக் காட்டி எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
“எடப்பாடி பழனிசாமி அவர்களே, பார்த்துப் பத்திரமாக இருங்கள்; தேர்தலுக்குப் பிறகு உங்களை ஏதோ ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக அனுப்பி விடுவார்கள்” என எள்ளி நகையாடிய கனிமொழி, இந்தத் தேர்தலை ஒரு சித்தாந்தப் போராக வர்ணித்தார். தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான கீழடிக்கும், வட இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகமான நாக்பூருக்கும் இடையிலான போராட்டமே இது என்று குறிப்பிட்ட அவர், தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகச் செயல்படும் சக்திகளை மக்கள் முறியடிக்க வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
