சினிமா எடுக்கும் ஆசையில் திரைத்துறைக்கு வந்த சிலர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளனர். அப்படி சினிமா எடுக்கும் ஆசையில் வருபவர்களை பொரி போட்டு பிடித்து மொக்கை கதையை வைத்து படத்தை எடுத்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டு சில இயக்குனர்கள் ஓடி விடுவார்கள். பல வருடங்களாக கஷ்டப்பட்ட சம்பாதித்த பணம் அனைத்தும் ஒரே படத்தில் போய்விடும். சிலருக்கு அதிர்ஷ்டவசமாக முதல் படம் ஓடி லாபத்தை கொடுத்து விடும். அந்த ஆசையில் சரியான இயக்குனர்களை தேர்ந்தெடுக்காமல் சில தோல்வி படங்களை கொடுத்துவிட்டு சொத்துக்களை இழந்து வாடகை வீட்டில் வசிக்கும் பல தயாரிப்பாளர்கள் தற்போது கோடம்பாக்கத்தில் உள்ளனர்.
அப்படி சினிமா ஆசையில் படம் எடுக்க வந்து பணத்தை இழந்த தயாரிப்பாளர் தான் எஸ் ஏ ராஜ்கண்ணு. பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் இவர். கிழக்கே போகும் ரயில் மற்றும் கன்னி பருவத்திலே உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர். இவர் பொள்ளாச்சி அருகே உள்ள சேரி பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர். முதலில் தேங்காய் வியாபாரம் செய்து வந்த இவர் ஒரு கட்டத்தில் டூரிங் டாக்கீஸ் உரிமையாளராக மாறினார். அப்போது திரைப்படங்களை தயாரித்து வந்த பொள்ளாச்சி ரத்தினம் என்பவரின் தங்கையை தான் இவர் திருமணம் செய்து கொண்டார்.
ஒருமுறை ரத்தினம் தயாரித்த தலைப்பிரசவம் என்ற படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கச் சென்ற ராஜ் கண்ணு அந்தப் படத்தில் உதவி இயக்குனராக சுறுசுறுப்பாக வேலை செய்து வந்த பாரதிராஜாவை அழைத்து நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் நான் தயாரிக்கிறேன் என சொல்ல மூன்று கதைகளை பாரதிராஜா கூறியுள்ளார். அதில் மயிலை என்ற கதை நன்றாக இருந்ததால் 16 வயதினிலே என்ற பெயரில் அந்த படம் உருவானது. 4. 75 லட்சம் செலவில் அந்த படத்தை ராஜ் கண்ணு தயாரித்த நிலையில் இந்த படத்தை வாங்க யாருமே முன்வரவில்லை. எனவே தானே துணிந்து அந்த படத்தை வெளியிட்டார்.
அந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்து பசுலை குவித்து அவருக்கு பெரும் லாபத்தை கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களையும் தயாரித்தார். 1981 ஆம் ஆண்டு அர்த்தங்கள் ஆயிரம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அந்தத் திரைப்படம் தோல்வியடைந்தது. எனவே கடனில் சிக்கினார். அவருக்கு உதவ பாக்கியராஜ் முன்வர எங்க சின்ன ராசா என்ற திரைப்படம் உருவானது. இருந்தாலும் முழு கடனையும் அடைக்க முடியவில்லை. நடிகர் ராஜேஷ் மூலம் ராஜ் கண்ணு கஷ்டப்படுவதை தெரிந்து கொண்ட கமல் ராஜ் கண்ணு தயாரிப்பில் மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு ராஜ் கண்ணு முழுமையாக கடனிலிருந்து மீண்டார்.