மூன்றாம் பிறை க்ளைமேக்ஸில் யாருமே எதிர்பார்க்காததை செய்த கமல்… படத்தை தூக்கி நிறுத்திய அந்த ஷாட் ஞாபகம் இருக்கா?

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.

அவருக்கும் நடிகை ஷோபாவுக்கும் இடையே காதல் மலர்ந்து அவர்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தனர். ஆனால் அவர்கள் மணவாழ்வு குறுகிய காலமே நீடித்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷோபா தற்கொலை செய்துகொண்டார்.

   

அந்த தற்கொலையில் பாலு மகேந்திராவுக்கு பங்கிருப்பதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் அவர் அரசியல் ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது. ஷோபா தன்னுடைய வாழ்வில் வந்து சென்றதை மையமாக வைத்தே அவர் மூன்றாம் பிறை எனும் திரைப்படத்தை உருவாக்கினார்.

அந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணாக ஸ்ரீதேவி நடித்தது ஷோபாவின் பிரதிதான் என்று பாலுமகேந்திரா கூறியுள்ளார். அந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. ஸ்ரீதேவி சுயநினைவுக்கு வந்து கமல்ஹாசனை மறந்துவிட்டு ரயிலில் புறப்பட, அவருக்கு ஞாபகம் வரவேண்டுமென்று கமல்ஹாசன் என்னென்னவோ முயற்சிகள் செய்வார்.

அப்போது ரயில் கிளம்பிவிட அவரும் ரயில் பின்னாடியே செல்வது போல காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த முழுக்காட்சியையும் கமலை வைத்து ஒத்திகை பார்த்துவிட்டுதான் படமாக்க முடிவு செய்துள்ளார். ஆனால் காட்சி படமாக்கும் போது கமல் எதிரே வரும் மின் கம்பத்தில் விழுந்து எழுந்து ஓடுவது போல நடித்திருப்பார். அந்த பகுதி அவர் எழுதியதில் இல்லையாம். கமல்ஹாசனே கற்பனை செய்து நடித்துள்ளார். அந்த ஒரு விஷயத்தால் கிளைமேக்ஸ் காட்சியின் சோகம் பலமடங்கு அதிகமானது என்றால் மிகையில்லை.