மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி ஒருவர், தனது கூட்டாளிகளை வரவழைத்து மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் கிழக்கில் உள்ள ஜானகி குளோபல் மருத்துவமனைக்கு சோனு என்ற நபர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வந்துள்ளார். அவருக்கு ஊசி மற்றும் குளுக்கோஸ் மூலம் வழக்கமான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துள்ளனர்.
சிகிச்சைக்கான மொத்த கட்டணம் ₹2,000 ஆக இருந்த நிலையில், மனிதநேய அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் அதனை ₹1,500 ஆகக் குறைத்துள்ளது. இருப்பினும், இந்த சலுகையை ஏற்றுக் கொள்ளாத நோயாளி, பணத்தைச் செலுத்தாமல் சாக்குப்போக்கு கூறத் தொடங்கியுள்ளார். முதலில் ‘ஜிபே’ (GPay) மூலம் ஆன்லைனில் பணம் அனுப்புவதாகக் கூறிய அவர், பின்னர் தனது நண்பர் கீழே பணத்துடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மருத்துவமனை ஊழியர்கள் அவருடன் கீழே சென்றபோது, அங்கு இரும்புக் கம்பிகள் மற்றும் குச்சிகளுடன் காத்திருந்த கும்பல் திடீரென மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் டாக்டர் அசோக் உட்பட பல மருத்துவமனை ஊழியர்கள் படுகாயமடைந்தனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வன்முறை காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
