நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர் பெரிதும் எதிர்பார்த்த மயிலாடுதுறை தொகுதி கூட்டணி கட்சியான பாமகவிற்கும், பூம்புகார் தொகுதி மாவட்ட செயலாளர் பவுன்ராஜிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே ஏற்படும் அதிருப்தியைத் தவிர்க்கவும், உட்கட்சி பூசல்களைக் கட்டுப்படுத்தவுமே எடப்பாடி பழனிசாமி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், காளியம்மாளின் மேடைப் பேச்சுத் திறனை முழுமையாகப் பயன்படுத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக அவரை முன்னிறுத்தி, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கட்சியின் கொள்கைகளையும், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான விமர்சனங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க அவர் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
