திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (நிலக்கோட்டை சர்வேயர்). இவருக்கும் காளீஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், காளீஸ்வரி தன் இரு பெண் குழந்தைகளுடன் பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி மாலை காளீஸ்வரி தனது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காளீஸ்வரியின் வீட்டிலிருந்து கடைசியாக அவரது கணவர் ஜெயசீலன் வெளியே சென்ற அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும், ஜெயசீலனின் செல்போன் எண் திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள அய்யலூர் பகுதியில் கடைசியாகச் செயல்பட்டு, பின்னர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதை சைபர் கிரைம் உதவியுடன் காவல்துறையினர் கண்டறிந்தனர். டவர் லொகேஷன் மற்றும் செல்போன் சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்டு தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலேயே பதுங்கியிருந்த ஜெயசீலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெயசீலனிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்பக் தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
