ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், தனது 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் குடும்பத்தினர் உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றிருந்த சமயத்தில், வீட்டில் தனியாக இருந்த இளைய மகளை மதுபோதையில் இருந்த தந்தை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வீட்டில் யாருமில்லாத நேரங்களில் அச்சிறுமியை மிரட்டி பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட வலுவான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை முடிவடைந்தது. தந்தை செய்த இக்கொடூரக் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி ஸ்வர்ணகுமார் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும், பெற்ற தந்தையாலேயே கடுமையான பாதிப்புக்கு உள்ளான சிறுமியின் எதிர்காலம் மற்றும் மறுவாழ்வைக் கருத்தில் கொண்டு, அரசு இழப்பீட்டு நிதியிலிருந்து அவருக்கு ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இத்தீர்ப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டம் கடுமையாகத் தண்டனை வழங்கும் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.
