தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் சில காரணங்களுக்காக பலருடைய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டது. அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள். கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் தற்போது வரை 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.
அதில் தகுதியான பெண்களை தேர்வு செய்யும் பணியை அரசு தற்போது தொடங்கியுள்ளது. ஊராட்சி வாரியாக விண்ணப்பித்த அவர்களின் தகுதிகள் தற்போது சரிபார்க்கப்படுகின்றன. அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் பயனாளிகளாக இணையும் வாய்ப்பு உள்ளது. நிலம் மற்றும் வருமானம் உள்ளிட்ட தகவல்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக இருக்க வேண்டும். முகவரி மற்றும் வசிப்பிடம் ஆவணங்களில் இருப்பது சரியாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது பிழை இருந்தால் கூட மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
புதிதாக அரசு வேலையில் சேர்ந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் அடைய முடியாது. இது ஒரு புறம் இருக்க ஒரு வேளை தகுதியானவர்கள் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் பெண்கள் மத்தியில் நிலவுகிறது. கடந்த முறை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அரசு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கியது. அதன்படி இந்த முறையும் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பு வழங்கும். இது தொடர்பான அறிவிப்பு இந்த மாதம் வெளியாக உள்ளதாக அரசு வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
