தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது.
இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர். இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் லிஸ்ட் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேர்வு செய்யப்படும் குடும்பத் தலைவிகளுக்கு செல்போன் மூலம் டிசம்பர் முதல் வாரத்தில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்து அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். குறுஞ்செய்தி வராதவர்களுக்கு பணம் கிடையாது. அரசு அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
