முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான மறைந்த காடுவெட்டி ஜெ. குருவின் மகள் விருதாம்பிகை, “ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சி” (ஜெகுபாமக) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வக் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். மஞ்சள் நிறக் கொடியின் மையத்தில் காடுவெட்டி குருவின் படம் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே குருவின் மகன் கனலரசன் ‘மாவீரன் மஞ்சள் படை’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அவரது மகளும் நேரடியாக அரசியல் களத்தில் குதித்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்த காடுவெட்டி குருவின் மறைவிற்குப் பிறகு, அவரது குடும்பத்தினருக்கும் பாமக தலைமைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குருவின் மருத்துவச் சிகிச்சையில் உரிய கவனம் செலுத்தவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அவரது குடும்பத்தினர் முன்வைத்து வந்தனர். இந்த விரிசலின் உச்சகட்டமாக தற்போது புதிய கட்சி உதயமானது பார்க்கப்படுகிறது.
வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து பல அமைப்புகள் ஏற்கனவே இயங்கி வரும் நிலையில், குருவின் மகள் தொடங்கியுள்ள இந்தப் புதிய கட்சி வரும் தேர்தல்களில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியாவை எதிர்த்து போட்டியிடுவேன் என்று விருதாம்பிகை தெரிவித்துள்ளார். மேலும் பாமக இரண்டு அணிகளாக (ராமதாஸ், அன்புமணி) செயல்படுவது பணத்திற்காகவே என்றும் விமர்சித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியலில் தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
