ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி, நடிகர் விஜய்யின் அரசியல் பரப்புரை குறித்த தனது விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். வேலூரில் விஜய் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வழக்கம் போல இந்தப் பேச்சிலும் ஆக்கபூர்வமான விஷயங்கள் ஏதுமில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் தனது பேச்சில் ஜல்லிக்கட்டுக் காளையை ஒரு குழந்தை புல்லுக்கட்டு காட்டி ஓரமாக அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டதை ஜூலி கடுமையாகச் சாடியுள்ளார். விஜய்யின் கட்சியில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என்பதால், அவர்கள் காளையிடம் புல்லுக்கட்டு காட்ட முயன்று ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு மீட்டெடுக்கப்பட்டு தற்போது சிறப்பாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், 50 பேரை 500 ஆக்கிவிட வேண்டாம் என எச்சரித்துள்ளார். ரசிகர்களுக்கு விபரீதம் ஏதும் ஏற்பட்டால் மீண்டும் போராடுவதற்கு யாரிடமும் திராணி இல்லை என்றும், எதையும் யோசித்து பக்குவமாகப் பேசுமாறும் விஜய்க்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
