ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநரான ஜோசப் கென்ட் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். ஈரானில் நடந்து வரும் போரைத் தனது மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான் அமெரிக்காவிற்கு எந்தவிதமான உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள சில ஆதரவுக் குழுக்களின் அழுத்தம் காரணமாகவே இந்தப் போர் தொடங்கப்பட்டதாகத் தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் முக்கியமான உயர் பதவியில் இருந்த ஒரு அதிகாரியே அரசின் போக்கை விமர்சித்துப் பதவி விலகியிருப்பது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாகவும், சர்வதேச அளவில் நெருக்கடியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தப் போரினால் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்து பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜோ கென்ட்டின் இந்த முடிவு அமெரிக்க மக்கள் மத்தியிலும், உலக அரங்கிலும் ட்ரம்ப் அரசின் செல்வாக்கைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
