வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், நகைக் கடன் வழங்கும் விதிகளில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFCs), வங்கிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்றே முன்னுரிமைத் துறை கடன் அந்தஸ்து வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. தற்போது வங்கிகள் மட்டுமே பெற்று வரும் இந்தச் சலுகை, நிதி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டால், அவை வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டிக்கு நிதியைப் திரட்ட வழிவகுக்கும். இது நிதி நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவைக் கணிசமாகக் குறைப்பதோடு, நகைக்கடன் சந்தையில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அதன் நேரடிப் பலன் சாமானிய மக்களைச் சென்றடையும். நிதி நிறுவனங்களுக்குப் பணத்தைத் திரட்டும் செலவு குறைவதால், அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும். தற்போது வங்கிகளை விட நிதி நிறுவனங்களில் வட்டி சற்றே அதிகமாக உள்ள நிலையில், இந்த புதிய விதிமுறை போட்டித்தன்மையை உருவாக்கி, மிகக் குறைந்த வட்டியில் மக்கள் கடன் பெற உதவும். இது குறிப்பாக அவசரத் தேவைக்காகவும், விவசாயம் மற்றும் சிறு வணிகத்திற்காகவும் நகைக் கடனை நம்பியிருக்கும் நடுத்தர மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும் ஒரு அறிவிப்பாக அமையும்.
