முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கான வருமான வரி நிலுவைத் தொகை எவ்வளவு என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகையாக ரூ.13.69 கோடி செலுத்தக் கோரி, அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதா உண்மையில் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை எவ்வளவு என்பது குறித்து தெளிவான மற்றும் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறைக்கு ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 12-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
