கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு இணையாக இருந்த மற்றொரு பெரிய ஹீரோ என்றால் அது நடிகர் ராமராஜன்தான். அவரை கிராமத்து நாயகன் என்று அழைத்தாலும், நகரவாசிகளுக்கும் அவரது படங்களை ரசிக்க பிடிக்கும். கங்கை அமரன் இயக்கம், இளையராஜா இசை, ராமராஜன் ஹீரோ, கவுண்டமணி, செந்தில் காமெடி என்றால் அந்த படம் 100 நாட்கள் ஓடும் என்பது அந்த காலகட்டத்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. அதை ராமராஜன் படங்கள் நிரூபித்து காட்டியது.

கரகாட்டக்காரன் பட வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன், நான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கஷ்டப்பட்டு அப்பு கேரக்டரில் குள்ளமாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றேன். ஆனால் தலையில் ஒரு கரகத்தை வைத்து ஆடி அதைவிட அதிக பாராட்டை ராமராஜன் பெற்றுவிட்டார் என பாராட்டி இருந்தார். அப்படி பெயருடன், புகழுடன் சினிமாவில் இருந்த ராமராஜன், அதிமுகவில் இணைந்து ஜெயலலிதாவின் அன்புக்குரிய தொண்டரானார். அதனால் எம்பி ஆனார். அதிமுக தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துக்கொண்டு பிரசாரம் செய்தார். குறிப்பாக திமுக கட்சிக்காரர்களை கடுமையாக தாக்கிப் பேசினார்.

அப்படி ஒரு முறை தேர்தல் பிரசாரத்தில் கலந்துவிட்டு காரில் மதுரைக்கு திரும்பிய போது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டிவந்த டிரைவர் உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த ராமராஜன், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அப்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓபிஎஸ்சை அழைத்த ஜெயலலிதா, ராமராஜன் இருக்கும் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வீர்களோ, அப்படி செய்து ராமராஜனை காப்பாற்றுங்கள் என உத்தரவிட்டார்.

பதறியடித்த அவர்கள் இருவரும் சென்று, கோமா ஸ்டேஜில் இருந்த ராமராஜனை பெரிய மருத்துவமனையில் சேர்த்து, பெரிய டாக்டர்களை வரவழைத்து அவரது உயிரை காப்பாற்றினர். எனினும் இந்த விபத்தால் பழைய அழகை, தோற்றத்தை, முகவடிவை இழந்த ராமராஜன் அதற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு பின் அவர் நடித்த ஓரிரு படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை என, சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
