நடிகர் விஷால் நடித்த சூப்பர் ஹிட் படமான திமிரு மூலம் விநாயகன் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்த விநாயகன் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். பல்வேறு திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் விநாயகன் சிறந்த நடிகருக்கான கேரளா மாநில திரைப்பட விருதையும் வென்றுள்ளார். முதன் முதலாக மாந்திரீகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார். இதனையடுத்து பகத் பாஸில் நடிப்பில் வெளியான ட்ரான்ஸ் படத்திலும் விநாயகர் சிறப்பாக நடித்திருந்தார்.

சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையும் விநாயகன் வில்லன் போல் தான் இருப்பார் போல. அவர் மீது பல்வேறு புகார்கள் இருக்கிறது. நேற்று மது போதையில் போலீசாரிடமே தகராறு செய்த விநாயகனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் விநாயகன் கைகட்டி நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக மதுபோதையில் விநாயகன் பக்கத்து வீட்டுக்காரரிடம் தகராறு செய்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விநாயகனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது விநாயகன் ஒரு போலீஸ்காரரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

