மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியச் சீட்டு வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அரசு ஊழியர்கள் பெறும் சம்பளச் சீட்டைப் போலவே, இனி ஓய்வூதியம் பெறுவோருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டவுடன் மின்னஞ்சல், எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் போன்ற டிஜிட்டல் முறைகளில் இந்த விவரங்கள் அனுப்பப்பட வேண்டும்.
ஓய்வூதியச் சீட்டுகள் முறையாகக் கிடைப்பதில்லை என முதியோர்களிடமிருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை அனைத்து வங்கிகளுக்கும் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த ஓய்வூதியச் சீட்டின் மூலம் மாத வருமானம், பிடித்தங்கள், நிலுவைத் தொகை மற்றும் இதர திருத்தங்கள் குறித்த முழுமையான தகவல்களை ஓய்வூதியதாரர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும். ஒருவேளை ஓய்வூதியதாரரின் மின்னஞ்சல் முகவரி வங்கியில் இல்லை என்றால், அதைப் பெற்று இந்தச் சேவையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு ‘cpao.nic.in’ என்ற இணையதளத்தில் பிபிஓ (PPO) எண் மற்றும் பிறந்த தேதியைக் கொண்டு பதிவு செய்தும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். அரசின் இந்த நடவடிக்கை ஓய்வூதியதாரர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
