மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரமாக தீவிரமடைந்துள்ள நிலையில், 5 நாள் போர் நிறுத்த அறிவிப்புகளையும் மீறி இரு நாடுகளும் கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் டெஹ்ரான் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை டெல் அவிவ் நகரை நோக்கி ஏவியது. இதில் அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஒரு ஏவுகணை வெடித்ததில் கட்டிடங்கள் சேதமடைந்ததோடு, பொதுமக்கள் நால்வர் காயமடைந்தனர். மேலும், ஈரானின் ட்ரோன்கள் சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் வான்வெளிகளில் ஊடுருவியது அந்தப் பிராந்தியத்தில் பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான எரிசக்தி கட்டமைப்பு தாக்குதல்களை ஒத்திவைப்பதாகக் கூறினாலும், மத்திய கிழக்கிற்குத் தனது கடற்படை மற்றும் ராணுவத்தை அதிகளவில் அனுப்பி வருவது போருக்கான தயார்நிலையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அதேநேரம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்றும், இன்னும் முடிக்கப்படாத முக்கியப் பணிகள் இருப்பதாகக் கூறி போரைத் தீவிரப்படுத்தும் சமிக்ஞையைத் தந்துள்ளார்.
மறுபுறம், லெபனான் நாட்டில் ஹெஸ்புல்லா அமைப்பினரை நோக்கி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிறுமி உட்பட 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தலையீடு நாட்டின் பாதுகாப்பைச் சிதைப்பதாகக் கூறி, லெபனான் அரசு ஈரான் தூதரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் போன்ற தலைவர்கள் முயற்சி எடுத்து வரும் நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு முகமது பாகா் சொல்கத்ர் புதிய செயலராக நியமிக்கப்பட்டிருப்பது அந்நாட்டின் அடுத்தகட்ட பாதுகாப்பு நகர்வுகளைக் கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.
