மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய இணைய சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியமான கடலடி கேபிள்கள் செங்கடல் மற்றும் அரபிக்கடல் வழியாகச் செல்கின்றன.
இந்த போரின் ஒரு பகுதியாக இக்கடலடி கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டால், உலக அளவில் இணைய வேகம் கடுமையாகக் குறையக்கூடும் அல்லது முற்றிலுமாகத் துண்டிக்கப்படலாம். இந்தியா போன்ற வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதார நாடுகளுக்கு இது ஒரு பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் இணைய போக்குவரத்தை மாற்றுப் பாதைகளில் திருப்புதல், செயற்கைக்கோள் வழி இணைய சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டுத் தரவுப் பரிமாற்றங்களை உறுதி செய்ய ‘நேஷனல் இன்டர்நெட் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா’ மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் ஒரு வழிப்பாதை துண்டிக்கப்பட்டாலும், மற்ற வழிகள் மூலம் இணைய சேவையைத் தடங்கலின்றி வழங்க இந்தியா தயாராகி வருகிறது.
