அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) தனது கடற்படை கொண்டு முழுமையாக மூடப்போவதாகவும், ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்கப்போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. இதன் விளைவாக, கடந்த வாரம் சரிவைக் கண்டிருந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து, தற்போது ஒரு பேரல் 104 முதல் 107 டாலர் வரை வர்த்தகமாகி வருகிறது. இந்த விலை ஏற்றம் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் பீதி நிலவி வரும் சூழலில், திங்கள்கிழமை அன்று ஈரானோடு தொடர்புடைய ‘ஆரோரா’ மற்றும் ‘நியூ ஃப்யூச்சர்’ ஆகிய இரண்டு கச்சா எண்ணெய் டேங்கர்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எவ்வித எதிர்ப்புமின்றி பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. அமெரிக்காவின் கடல்சார் முடக்கம் அமலுக்கு வருவதற்கு முன்பே இந்த கப்பல்கள் வெளியேறியுள்ளதாக Kpler மற்றும் LSEG ஆகிய தரவு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதே சமயம், ஈரானிய கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த ‘Felicity’ மற்றும் ‘Jaya’ ஆகிய இரண்டு சூப்பர் டேங்கர் கப்பல்கள் இந்திய கடற்கரையை வந்தடைந்துள்ளன, இது ஆசிய நாடுகளுக்கான விநியோகத்தில் தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளது.
தற்போது ஹார்முஸ் வழித்தடத்தில் போக்குவரத்து மிகவும் மந்தமாகவே காணப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 138 கப்பல்கள் பயணிக்கும் திறன் கொண்ட இந்த பாதையில், போர் நிறுத்தம் துவங்கியதில் இருந்து இதுவரை 23 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளன. இதில் 16 கப்பல்கள் ஈரானின் கச்சா எண்ணெய் தொடர்புடையவை ஆகும். ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால், சுமார் 800-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் வளைகுடா கடலில் வெளியேற முடியாமல் தேக்கமடைந்துள்ளன. இந்த முடக்கம் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
மறுபுறம், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. லெபனானின் தெற்குப் பகுதியிலும் காசாவிலும் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த அமெரிக்கா முயன்று வரும் வேளையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் பேச்சுவார்த்தைக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன. போர் நிறுத்த முயற்சிக்கு இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரும் 750-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் அமைதி திரும்புவதைச் சிக்கலாக்கியுள்ளது.
