தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது சோதனை நடந்ததற்கான வீடியோ ஆதாரங்களை அவர் வெளியிட்டுள்ளார். தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி கன்னியாகுமரிக்கு வருகை தந்தபோது, படப்பை பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு அச்சுறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எத்தனை பேரின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வருமான வரித்துறை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் செலவுக்காகத் தேசிய தலைமையிலிருந்து 25 லட்சம் ரூபாய் முறைப்படி வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அரசியல் காரணங்களுக்காகத் தனது கட்சிப் பணிகள் நடைபெறும் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சோதனை நடத்தப்பட்ட இடங்கள் மற்றும் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரங்களை வெளியிடாமல், ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இது குறித்த மேலும் பல ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
