கேரள மாநிலம் மலப்புறத்தைச் சேர்ந்த 60 வயதான அப்துல் மஜீத் என்பவருக்கு, அம்மாநில பொதுச்சேவை ஆணையத்திடம் (PSC) இருந்து பகுதிநேர இளநிலை அரபு மொழி ஆசிரியருக்கான பணி நியமனக் கடிதம் கடந்த மாதம் வந்துள்ளது. இதைப்பார்த்து அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்; காரணம், இந்த வேலைக்கான தேர்வை அவர் எழுதியது 2005ஆம் ஆண்டில்! மேலும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் 2008ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்ட நிலையில், 18 ஆண்டுகள் கழித்து இந்த உத்தரவு அவரிடம் வந்து சேர்ந்துள்ளது.
இந்த அதிரடி தாமதம் குறித்து வேதனையுடன் பேசியுள்ள மஜீத், “எனக்கு 60 வயதைக் கடந்த பிறகு அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணமே இல்லாமல் போய்விட்டது; இந்தத் தற்போதைய நிலையில் இந்த வேலை எனக்கு எந்தப் பயனும் தராத அளவுக்கு மிகத் தாமதமாக வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட ஆள்சேர்ப்பு முயற்சிகளுக்குப் பிறகும் தகுதியான நபர்கள் கிடைக்காமல் காலியாக இருந்த ஒரு பணியிடத்திற்காகவே, பழைய பட்டியலின் அடிப்படையில் தற்போது மஜீத்துக்கு இந்தத் தேர்வு கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
டிஎன்பிஎஸ்சி போன்ற அரசுத் தேர்வுகளில் கடிதம் கிடைத்த 3 மாதங்களுக்குள் ஆவணங்களைச் சமர்ப்பித்து பணியில் சேர வேண்டும் என்பது விதியாகும். ஆனால், மஜீத்தின் பள்ளிச் சான்றிதழின்படி அவரது பிறந்த தேதி மே 27, 1966 ஆகும். இதன் மூலம் அவர் 60 வயதை எட்டி, அரசு நிர்ணயித்துள்ள ஓய்வுபெறும் வயதைக் கடந்துவிட்டதால், 20 ஆண்டுகள் காக்க வைத்து வந்த இந்த அரசு வேலைக்கு அவரே தகுதியற்றவர் ஆகிப்போனதுதான் இதில் உச்சக்கட்ட சோகம்.
