பொதுவாகவே சினிமாவின் பின்னணியை புரட்டிப் பார்த்தால் இன்றைய காலத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வியக்கும் அளவிற்கு பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அப்படித்தான் ஒரு படத்தின் தலைப்பை மாற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிந்துள்ளது. அந்த காலத்தில் திகில் மற்றும் தெள்ளார் திரைப்படங்களை தந்து கொண்டிருந்த வீணை எஸ் பாலச்சந்தர் இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் கைதி. கடந்த 1951 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அவருடன் எஸ் ஏ நடராஜன், ரேவதி மற்றும் மீனாட்சி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அமெரிக்க படமான டார்க் பேசஸ் என்ற படத்தின் கதையை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் நாயகன், சிறையிலிருந்து தப்பித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதையாகும். இந்தப் படத்தை ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு ரத்தம். இதனால் ஜூப்பிட்டர் பிலிம்ஸ் இன் ரத்தம் விரைவில் வருகிறது என்ற வாக்கியத்துடன் பத்திரிகைகளில் செய்தி வெளியாக போஸ்டர்கள் மற்றும் சுவர்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் குழப்பம் அடைந்தனர். ரத்தம் விரைவில் வருகிறது என்று ஒரு தலைப்பா என்று இது குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதி தலைப்பை மாற்ற வேண்டுமென நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிந்துள்ளது. மக்கள் தலைப்பை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள் என்பதை அறிந்த அந்த தயாரிப்பு நிறுவனம் படத்தின் தலைப்பை கைதி என்று மாற்றி அமைத்தது.
