கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் விஷ்வா (20). கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு instagram மூலமாக புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த தானாம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறிய விஷ்வா தன்னுடைய கிராமத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி சிறுமி விஷ்வாவின் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள கோவிலில் வைத்து விஷ்வா சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிறுமி மாயமானது தொடர்பாக அவருடைய பெற்றோர் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை விஷ்வா அழைத்துச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விஷ்வாவை கைது செய்தனர். சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். தற்போது விஷ்வாவை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
