புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர மகளிர் உதவித்தொகையை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளார். இதுவரை மாதந்தோறும் ரூ.1,000 ஆக வழங்கப்பட்டு வந்த இந்தத் தொகை, தற்போது 150 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாஹே பகுதியில் புதிய மருத்துவமனை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்றபோது முதல்வர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தத் திட்டத்துடன் சேர்த்து முதியோர் உதவித்தொகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதியோர்களுக்கான உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நிதி உதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொகை உயர்வு வருகின்ற பிப்ரவரி 7-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இல்லத்தரசிகளும், முதியோர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அதிரடி உயர்வு ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார நிலைக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
