தமிழ் சினிமாவில் இசைஞானி என அழைக்கப்படுபவர் இளையராஜா. உண்மையில் அவரது இசைஞானம் நம்மை மெய்சிலிர்க்க வைப்பது உண்மைதான். ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ பாடலை கேட்டால், பக்தி பரவசத்தில் மனம் மயங்கி, மெய் உருகும்படியாக இருக்கும். அதிகாலையில் அந்த பாடலை மனம் உள்வாங்கி கொண்டால், அன்று மாலை வரை அந்த பாடல் மனதுக்குள் ரீங்காரமிட்டபடியே இருக்கும். தமிழ் சினிமாவில், அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா ஒருகட்டத்தில், ஒரு நாளில் 10 படங்களுக்கு இசை அமைக்கும் அளவுக்கு மிக பிஸியான இசைஞானியாக மாறிப் போனார். இசையில் அவர் தொடாத சிகரங்களே இல்லை என்று கூறலாம்.
இசைத்துறையில் இவ்வளவு பெரிய மனிதராக, உயர்ந்த நிலையில் இருக்கும் இளையராஜா, தனிமனிதராக பலவிதமான விமர்சனங்களை அடிக்கடி சந்தித்து வருகிறார். குறிப்பாக அவரது கோபமும், பேச்சும் பலரையும் காயப்படுத்தி விடுகிறது. அவர் பாடலை நாள் கணக்கில் கேட்கலாம். அவரது வார்த்தைகளை ஒரு நிமிடம் கூட கேட்க முடியாது என்று விமர்சிக்கும் அளவுக்கு அவர் பல நேரங்களில் பேசி சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். அதே வேளையில் திரைத்துறை சார்ந்த பலரிடமும் அவர் சண்டை போட்டுள்ளார். இளையராஜா, வைரமுத்து மோதல் 36 ஆண்டுகளாக நீடிக்கிறது. அவரது இசைக்கு, வைரமுத்து பாடல் எழுதுவதில்லை. வைரமுத்து வரிகளுக்கு இளையராஜா இசையமைப்பது இல்லை என்ற நிலை, தமிழ் சினிமாவில் 36 ஆண்டுகளாக நீடிக்கிறது.
இளையராஜாவின் உடன்பிறந்த சகோதரர் கங்கை அமரன். அவருடனும் இளையராஜா சண்டை. பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது. இளையராஜாவின் மனைவி ஜீவா, இறந்துவிட்டார். அவர் உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அப்போது, கதறி அழுதபடி அண்ணியின் உடலை பார்க்க வீட்டுக்குள் ஓடி வருகிறார். அவன் வரக்கூடாது என தடுக்கச் சொல்கிறார் இளையராஜா.
அம்மாவுக்கு பிறகு நான் அண்ணி கையால் வாங்கி சாப்பிட்டவன், என அழுது துடிக்கிறார் கங்கை அமரன். அங்கிருந்த கலைத்துறை சார்ந்த மூத்த வயதினர், இளையராஜாவை சமாதானப்படுத்த, கங்கை அமரன் உள்ளே வருகிறார். அப்போதும் தம்பியின் முகத்தை பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டார் இளையராஜா. அப்படி ஒருவருடன் கோபம் கொண்டால், காலம் முழுக்க அதையே பிடிவாதமாக பிடித்துக்கொள்ளும் மோசமான குணம் இளையராஜாவுக்கு உண்டு என்று ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு.