இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்த உள்ளார். அதற்கான ஒத்திகை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் பாலு மகேந்திராவைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இளையராஜாவுக்குப் பிடித்த இயக்குனர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர். இதை இளையராஜாவே பலமுறை தன்னுடைய நேர்காணல்களில் வெளிப்படையாக சொல்லியுள்ளார். இந்நிலையில் பாலுமகேந்திராவின் ‘ஓலங்கள்’ படத்திற்காக அவர் உருவாக்கிய பாடல் ஒன்றை அதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார்.
தமிழில் மட்டுமே ‘சங்கத்தில் பாடாத கவிதை’ மற்றும் ‘நீர்வீழ்ச்சி தீமூட்டுதே’ என இரண்டு பாடல்களுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
