இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்த உள்ளார். அதற்கான ஒத்திகை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் பாலு மகேந்திராவைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசும்போது 80 களில் தன்னுடைய இசையமைப்புப் பற்றியும் தனக்குப் பிடித்த இயக்குனர்களோடு பணியாற்றியது பற்றியும் பேசியுள்ளார். அதில் “பாலு மகேந்திரா சார் ஒரு படம் முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு வருவதற்குள் நான் ஐம்பது அறுபது படங்கள் முடித்திருப்பேன். ஆனால் எனக்கு யார் படங்களுக்கு எல்லாம் இசையமைக்கப் பிடிக்குமென்றால் மிகக் குறைவானவர்கள்தான்… பாலு மகேந்திரா, பாரதிராஜா , மணிரத்னம் மற்றும் மகேந்திரன். இவர்கள் படமெல்லாம் வந்தால் எனக்கு அப்பாடா என்றிருக்கும்.” எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.
இவர்கள் அனைவரும் மென்மையான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது மாதிரியான படங்களாக இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
