நூறாண்டு கால தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற ஒரு ஆளுமை என்றால் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவின் பெயரை சொல்லலாம். இசையமைப்பாளராக அவர் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை அவர் செய்திருக்கும் சாதனைகள் உலக சினிமாவிலேயே எவரும் இதுவரை படைக்காத சாதனைகள்.
இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிக பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
இளையராஜாவின் படைப்புத்திறன் உச்சத்தில் இருந்த காலம் என்றால் அது 70 களில் இறுதியில் இருந்து 90 களின் தொடக்கத்தில் ரஹ்மானின் அறிமுகம் வரை என்று சொல்லலாம். அதன் பின்னரும் அவர் தீவிரமாக இயங்கினாலும் அவரின் புகழ் உச்சத்தில் இருந்த காலம் என்றால் அது 80கள்தான். அப்போதெல்லாம் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 50 படங்கள் வரை இசையமைத்துள்ளார். இதனால் அவருக்கு ஒருநாள் கூட ஓய்வு கிடைக்காத சூழலே இருந்துள்ளது.
பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் அவர் பாடலை அதிகமாக பாடியது எஸ் பி பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், சித்ரா, ஜானகி போன்றவர்கள்தான். இவர்களுக்குதான் அதிகமான பாடல்களை அவர் வழங்கினார். மூத்த பாடகர்களான டி எம் எஸ், சுசீலா மற்றும் எல் ஆர் ஈஸ்வரி ஆகியோர் இளையராஜா இசையில் அதிகமாக பாடல்கள் பாடவில்லை.
இதில் எல் ஆர் ஈஸ்வரியை தன்னுடைய முதல் படமான அன்னக்கிளி படத்தில் ஒரு பாடல் அழைத்தாராம் இளையராஜா. ஆனால் அப்போது வேறொரு பாடல் ரெக்கார்டிங் இருந்ததால் எல் ஆர் ஈஸ்வரி மறுத்துவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் இளையராஜா அப்போது புதிய இசையமைப்பாளர் என்பதால் அவரை அலட்சியப்படுத்தும் விதமாக ஏதோ சில வார்த்தைகளையும் பேசிவிட்டாராம்.
அதனால் இளையராஜா தான் வளர்ந்து பெரிய இசையமைப்பாளர் ஆனபோதும் எல் ஆர் ஈஸ்வரிக்கு அதிக பாடல்களைக் கொடுக்கவில்லை. வெகுசில பாடல்கள் மட்டுமே கொடுத்துள்ளார். அதுவும் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் பாடல்களாக அமையவில்லை என்பதுதான் சோகம்.
