இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு பண தேவை என்பது அதிகமாக ஆகிவிட்டது. முந்தைய காலம் போல் இல்லாமல் பணத்தை சேர்த்து விட்டு செலவு பண்ணுவோம் என்று நினைப்பதில்லை. முதலிலேயே எல்லாவற்றையும் லோன் போட்டு வாங்கிவிட்டு இஎம்ஐ கட்டுவதே மக்களின் பழக்கமாக இருக்கிறது. அது தவிர ஒரு சிலர் பெர்சனல் காரணங்கள் கூட லோன் எடுப்பார்கள். ஆனால் இந்த லோன் எடுப்பது என்பது மிகப்பெரிய ஒரு நீண்ட புராசஸ் ஆகும். அதை எடுப்பதற்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து உயர் அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி லோன் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால் ஒரே ஒரு ஆதாரம் இருந்தால் போதும் உங்களால் ரூ 50000 வரை லோன் பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இனி காண்போம்.

மத்திய அரசால் நடத்தப்படும் பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனாவின் கீழ் ஆதார் அட்டை மட்டுமே வைத்துக்கொண்டு ரூபாய் 50 ஆயிரம் வரை கடன் பெறலாம். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த கடனை பெறுவதற்கு உங்களுக்கு எந்தவித உத்தரவாதமோ அல்லது பாதுகாப்போ தேவை இல்லை. இந்த கடன் ஆனது சிறுவணிகர்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க விரும்புபவர்களுக்கு வெகுவாக உதவும்.
இந்த திட்டம் குறிப்பாக தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த திட்டத்தின் நோக்கமானது சிறு வணிகர்களுக்கு தொழிலை பெருக்கிக் கொள்ள எந்த ஒரு உத்திரவாதமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. இந்தத் பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனா திட்டத்தின் கீழ் வணிகர்கள் முதலில் பத்தாயிரம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். அதை அவர்கள் சரியான முறையில் திருப்பி செலுத்தி விட்டால் அடுத்த முறை ரூபாய் 20000 கடன் பெறலாம். தொடர்ந்து கடனை சரியாக திருப்பி செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ 50000 வரை கடன் அளிக்கப்படுகிறது. வாங்கிய கடனை 12 மாத தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும்.

இந்த பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனாவின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் நீங்கள் நடைமுறையில் பயன்படுத்தும் மொபைல் எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற அரசு வங்கி அல்லது ஆன்லைன் மூலமாக அல்லது பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் வணிக விவரங்கள் வங்கி விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
