முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ₹98 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில், 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளிக்கும் கோப்புகளை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போதைய பொதுத் துறை செயலாளரும் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், மத்திய அரசு கேட்ட விளக்கங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியே பதிலளித்து பொதுத் துறை செயலாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக இந்த விவகாரத்தில் பொதுத் துறை தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கோப்புகள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, சட்டமன்றத் தேர்தல் அல்லது ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களைச் சாக்காக ஏற்க முடியாது என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றம் தொடர்ந்து பல உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து நீதிபதி தனது பலத்த அதிருப்தியைப் பதிவு செய்தார். மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு இயந்திரமும் அதிகாரிகளும் முயற்சிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
